×

கார் மீது பஸ் மோதி தாய், மகள் பலி: சென்னை, காஞ்சியை சேர்ந்தவர்கள் உட்பட 45 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை மற்றும் காஞ்சியை சேர்ந்தவர்கள் உட்பட 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா (50). இடியாப்பம் வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி ஜெயா (40), மகள்கள் வசந்தி (17), வைதேகி (13) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு சென்றார். இந்த காரை அழகுராஜா ஓட்டிச் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மெதுவாக சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க காரை அழகுராஜா மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் ராமேஸ்வரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ் கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில், பேருந்து மற்றும் லாரிக்கு இடையே சிக்கிய கார் நசுங்கியது.

இந்த விபத்தில் காரில் சென்ற அழகுராஜாவின் மனைவி ஜெயா மற்றும் மகள் வசந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தனியார் டிராவல்ஸ் பேருந்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற காஞ்சிபுரம் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (54), தன்ராஜ், (52), வரதராஜ் (70), மோகன் (72), சுரேஷ் (40), குப்பு (63), நிர்மலா (61), ஸ்ரீதரன் (63), பரணி (50), சந்திரசேகர் (63), லதா (47) மற்றும் காரை ஓட்டிச் சென்ற அழகுராஜா உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* பஸ் கவிழ்ந்து மாணவி சாவு லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
ஈரோடு அடுத்துள்ள நஞ்சனாபுரத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வரும் மாணவ, மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு மலைப்பகுதிக்கு நேற்று முன்தினம் தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர். இந்த பஸ்சில் 15 மாணவிகள் உள்பட 59 பேர் பயணித்தனர். கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் வளைவு ஒன்றில் பஸ்சை திருப்ப முயற்சித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் ஸ்வேதா (20) என்ற மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான ராசிபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருவண்ணாமலை வேட்டவலம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் வேட்டவலம் அடுத்த ஆனானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (32), அதே கிராமத்தை சேர்ந்த நண்பரான கோபாலகிருஷ்ணனின் (35) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post கார் மீது பஸ் மோதி தாய், மகள் பலி: சென்னை, காஞ்சியை சேர்ந்தவர்கள் உட்பட 45 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanchi ,Ulundurpet ,Akurraja ,Odukambatti, Dindigul district.… ,
× RELATED காஞ்சியில் லேசான மழை